5042. | ஆயபொன்தலத்து ஆய்வளை அரம்பையர் ஆயிரர்அணிநின்று தூய வெண்கவரித்திரள் இயக்கிடச் சுழிபடுபசுங்காற்றின் மீய கற்பகத்தேன்துளி விராயன, வீ்ழ்தொறும் நெடுமேனி தீய, நல்தொடிச்சீதையை நினைதொறும் உயிர்த்து,உயிர் தேய்வானை- |
ஆய - அப்படிப்பட்ட; பொன் தலத்து - பொன்மயமான அரண்மனையில்; ஆய்வளை - சில வளையல்களை அணிந்த; ஆயிர அரம்பையர் - ஆயிரக்கணக்கான அரம்பையர்கள்; அணி நின்று - வரிசையாக இருந்து; தூயவெண் - தூய்மையும் வெண்மையும் பெற்ற; கவரித்திரள் - கவரிக் கூட்டங்களை; இயக்கிட - வீச (அதனாலேஎழுந்த); சுழிபடு - சுழித்தலைப் பெற்ற; பசுங்காற்றின் - இளங்காற்றால்; மீய - மேலேயுள்ள; கற்பகத் தேன்துளி - கற்பக மலரில் உள்ள தேன் துளிகள்; விராயன - மலருடன் கலந்தனவாய்; வீழ்தொறும் - படுந்தோறும்; நெடுமேனி தீய - பெரிய உடல் வெப்பமடையவும்; நல்தொடி - நல்ல வளையல் அணிந்த; சீதையை நினைதொறும் - சீதாபிராட்டியை எண்ணுந்தோறும்; உயிர்த்து - பெருமூச்சுவிட்டு; உயிர்தேய்வானை - உடல் தேய்கின்றவனை (இராவணனை). பொன்தலத்துஅரம்பையர் எனச் சேர்த்து விண்ணுலக மகளிர் என்றே அனைவரும் பொருள் கொண்டனர். திரிசிரபுரம் மகாவித்துவான் வி. கோவிந்தபிள்ளை அவர்கள், பொன்தலத்து என்பதற்கு பொன்மயமான இடம் என்று உரை வகுத்தார். வீயகற்பக -என்று பாடங்கொண்டு, கற்பகவீய எனக்கூட்டி கற்பகமலர் என்று பொருள் கொண்டவர் பலர். நன்று போலும். அணி நின்று -பக்கத்தில் இருந்து (பிறவுரை) உயிர் என்றது உடலை. தேய்வது அதுவாதலின். உயிர் முன்புடைப்ப (சிலம்பு - அடைக்கல - 86) என்னும் தொடரின்கீழே உயிர் என்றது ஆகுபெயரான் உடம்பை என்று வரைந்தார் அரும்பத உரையார். (208) |