5056. | ஆலம்பார்த்து உண்டவன்போல் ஆற்றல்அமைந்துளர் எனினும் சீலம் பார்க்கஉரியோர்கள் எண்ணாதுசெய்பவோ ?- மூலம்பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறைதெரினும் காலம் பார்த்து,இறைவேலை கடவாதகடல் ஒத்தான். |
(அனுமன்) உலகை - உலகங்களை; முற்றுவிக்கும் - அழிக்கின்ற; முறைதெரினும் - இயல்பை உடையது என்றாலும்; காலம் பார்த்து - காலத்தின் (ஆணையை) எதிர்பார்த்து; இறை - சிறிதுகூட; வேலை கடவாத - கரையை மீறிப்போகாத; கடல் ஒத்தான் - கடலைப்போல இருந்தான்; மூலம் - (அவ்வாறு அடங்கியதற்கு) காரணத்தை; பார்க்குறின் - ஆராய்ந்தால்; பார்த்து - தேவர்களின் துன்பத்தை நோக்கி;ஆலம் - விடத்தை; உண்டவன்போல் - உட்கொண்ட சிவபிரானைப்போல; ஆற்றல் - வலிமை; அமைந்துளர் எனினும் - அமையப் பெற்றவர் என்றாலும்; சீலம் - (தமக்குரிய) ஒழுக்கத்தை; பார்க்க உரியோர்கள் - பாதுகாக்கும் இயல்புடையவர்கள்; எண்ணாது - ஆராயாமல்; செய்பவோ - ஒரு செயலைச் செய்வார்களோ ?. வேலை - கரை.'வேலை கடவாத பள்ளக்கடல்' (கம்ப - 1925) சீலம் பார்த்தல். ஒழுக்கத்தைப் பாதுகாத்தல். காலம் கருதியிருப்பர்... ஞாலம் கருதுபவர் என்று குறள் பேசும் (குறள் - 485). (222) |