5057.

இற்றைப்போர்ப் பெருஞ்சீற்றம்
     என்னோடும்முடிந்திடுக;
கற்றைப் பூங்குழலாளைச்
     சிறைவைத்தகண்டகனை
முற்றப் போர்முடித்தது ஒரு
     குரங்குஎன்றால், முனைவீரன்
கொற்றப்போர்ச் சிலைத்தொழிற்குக்
     குறைவு உண்டாம் ! எனக் குறைந்தான்.

(அனுமன்)

    இற்றை - இன்றைய தினத்தில்; போர் - (இராவணனுடன்) போர் செய்ய
வேண்டும் என்னும்; பெருஞ்சீற்றம் - பெரியகோபம்; என்னோடு -
எனக்குள்ளேயே; முடிந்திடுக - அடங்கிக் கிடக்கட்டும்; பூ - மலரணிந்த;
கற்றைக்குழலாளை - அடர்ந்த கூந்தலையுடைய பிராட்டியை; சிறை வைத்த
-
சிறையிலே வைத்த; கண்டகனை - முள்போலும் இராவணனை; ஒரு
குரங்கு -
ஒரு குரங்கு; முற்ற - அழிய; போர் - போரிலே; முடித்தது -
அழித்தது; என்றால் - என்று பேசப்பட்டால் (அது); முனைவீரன் - போரில்
வல்ல இராமபிரானின்; கொற்றம் - வெற்றியைத் தருகின்ற; சிலை
போர்த்தொழிற்கு -
வில்லாற் செய்யப்படும் போர்ச் செயலுக்கு; குறை
உண்டாம் -
தாழ்ச்சி உண்டாகும்; என - என்று நினைந்து; குறைந்தான் -
சீற்றம் தணிந்தான்.

     பிராட்டி, ஐயன்வில்லின் ஆற்றலுக்கு மாசு உண்டாம் என்று கருதி,
சொல்லினால் சுடாமல் அடங்கியிருந்தாள். அனுமனும் வீரன் சிலைக்குக்
குறைவு உண்டாம் என்று கருதி இராவணனோடு போர் செய்தலைத்
தவிர்த்தான்.

     கண்டகன் - முள்போன்றவன். கண்டகம் - முள் இளம் கண்டகம் விட
நாகத்தின் நாவொக்கும் ஈர்ம்புரவே (பாண்டிக்கோவை 283) முனை - போர்.
வேந்துடைத்தானை முனைகெட (புறம் 330).                   (223)