5076. | துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு ஒப்பினான்தனைநினைதொறும், நெடுங் கண்கள் உகுத்த அப்பினால்நனைந்து, அருந் துயர் உயிர்ப்புடை யாக்கை வெப்பினால்புலர்ந்து, ஒரு நிலை உறாத மென் துகிலாள். |
துப்பினால்செய்த - பவளத்தால் செய்யப்பெற்ற; கையொடு கால் பெற்ற - கைகளையும் கால்களையும் பெற்ற; துளி மஞ்சு ஒப்பினான்தனை - மழை பொழியும் மேகம் போன்ற இராமபிரானை; நினைதொறும் - நினைக்கும் போதெல்லாம்; நெடுங்கண்கள் உகுத்த - நீண்ட கண்கள் சிந்திய; அப்பினால் நனைந்து - கண்ணீரால் நனையப் பெற்று; அருந்துயர் உயிர்ப்புடை யாக்கை - போக்க முடியாத துன்பமும் பெருமூச்சும் பெற்ற உடம்பின்; வெப்பினால் உலர்ந்து - வெப்பத்தால் உலர்ந்து; ஒருநிலை உறாத - ஒருபடித்தாய் இராத; மென்துகிலாள் - மெல்லிய ஆடையுடையளாய்இராநின்றாள். பவளக்காலும்பவளக்கையும் பெற்ற மேகம், என்றது இல்பொருள் உவமையணி. (8) |