5081. | 'மாண்டுபோயினன் எருவைகட்கு அரசன் மன்; மற்றோர், யாண்டை என்நிலை அறிவுறுப்பார்கள் ? இப் பிறப்பில் காண்டலோ அரிது'என்று, என்று, விம்முறும்; கலங்கும்; மீண்டு மீண்டுபுக்கு எரி நுழைந்தாலென, மெலிவாள். |
எருவைகட்கு அரசன்- கழுகுகளின் தலைவனான சடாயு; மாண்டு போயினன் - இறந்து விண்ணுலகை அடைந்தான்; மற்றோர் - வேறுபிறர்; யாண்டை - எங்கே; என் நிலை அறிவுறுப்பார்கள் - என்னுடைய தற்போதையநிலையைச் (இராமலக்குவர்க்குச்) சொல்வார்கள்; இப்பிறப்பில் - (ஆதலால்) இந்தப் பிறப்பிலே (இராமலக்குவர்களை); காண்டலோ அரிது - காண்பது அருமையானதாகும்; என்று என்று - என்று பலபடியாக எண்ணி; விம்முறும் - துன்புறுவாள்; கலங்கும் - சஞ்சலம் அடைவாள்; மீண்டு மீண்டு - திரும்பத் திரும்ப; எரி புக்கு - நெருப்பு புகுந்து; நுழைந்தால் என - நுழைந்தாற் போல; மெலிவாள் - தளர்ச்சியடைவாள். கழுகுகட்கு அரசன்இறந்து போயினனோ என்று பிராட்டி ஐயுறுவதாக உரை கூறுவாரும் உளர். சடாயு இறந்து விட்டான் என்று கருதிப் பிராட்டி "வன்துனை உளன் என வந்த மன்னனும் பொன்றினன்" என்று கூறிப் புலம்புகிறாள் (கம்ப. 3447) ஆதலின் அவ்வுரை பொருந்தாது. எருவைகள் - கழுகுகள். நெருப்புச் சுட்ட இடத்திலேயே மீண்டும் நெருப்புப் புகுந்து சுட்டாற் போலப் பிராட்டி வருந்தினாள் என்க. (13) |