5088. | 'மெய்த்திருப்பதம் மேவு' என்ற போதினும், 'இத் திருத்துறந்து ஏகு' என்ற போதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும்முகத்தினை உன்னுவாள். |
மெய்த்திருப்பதம் - உண்மையான அரசபதவியை; மேவு என்ற போதினும் - அடைக என்று (மன்னவன்) கூறிய சமயத்திலும்; இத்திருத் துறந்து - இந்த அரச பதவியை விட்டு விட்டு; ஏகு என்ற போதினும் - கானகம் செல்க என்று (கைகேசி) கூறிய சமயத்திலும்; சித்திரத்தின் அலர்ந்த - சுவர் ஓவியத்திலே மலர்ந்த; செந்தாமரை ஒத்திருக்கும் - செந்தாமரையைப் போன்றிருக்கும்; முகத்தினை உன்னுவாள் - திருமுகத்தை நினைப்பாள். தாமரை பகலில்மலரும். இரவில் குவியும். ஓவியத் தாமரை எப்போதும் ஒருபடித்தாக இருக்கும். ஓவியத் தாமரை போன்றது இராமன் முகம். (20) |