5101.

'முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,
துனி அறு புருவமும்,தோளும், நாட்டமும்,
இனியன துடித்தன;
ஈண்டும், ஆண்டு என
நனிதுடிக்கின்றன;ஆய்ந்து நல்குவாய்.

     முதல்வன் -(எனக்கு)ஆதாரமான இராமபிரான்; மிதிலையில் -
மிதிலை மா நகரில்; முனியொடு முந்து நாள் - கோசிக முனிவனுடன் வந்த
காலத்தில்; துனி அறு - குற்றம் அற்ற; புருவமும் தோளும் நாட்டமும் -
புருவமும் தோளும் கண்ணும்; இனியன துடித்தன - இன்பத்தை
விளைவிப்பனவாய் துடித்தன; ஈண்டும் - இச்சமயத்திலும்; ஆண்டு என -
அங்கே துடித்தாற் போல; நனி துடிக்கின்றன - இடையறாமல் துடிக்கின்றன;
(இதன் காரணத்தை) ஆய்ந்து நல்குவாய் - (ஆராய்ந்து) கூறுவாயாக.

       "நல் எழில்உண்கணும் ஆடுமால் இடனே" (கலி.11)          (33)