5102. | 'மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்; அறம் தரு சிந்தைஎன் ஆவி நாயகன், பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத் துறந்து, கான்புகுந்த நாள், வலம் துடித்ததே. |
மறந்தனென் -நான்ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன்; இதுவும் ஓர் மாற்றம் - இந்த ஒரு மொழியையும்; கேட்டி - கேள்; அறம் தரு சிந்தை - அறத்தைப் பாதுகாக்கின்ற உள்ளத்தைப் பெற்ற; என் ஆவி நாயகன் - என்னுடைய உயிர்த் தலைவன்; பிறந்த பார் முழுவதும் - மூத்தவனாகப் பிறந்ததனால் அடைய வேண்டிய பூமி முழுவதையும்; தம்பியே பெற - தம்பியாகிய பரதனே அடையும்படி; துறந்து - (அவற்றையெல்லாம்) விட்டுவிட்டு; கான் புகுந்த நாள் - காடு புகுந்த காலத்து; வலம் துடித்தது - வலப்பக்கம் துடித்தது. கேட்டி - ஆல் -அசை. ஆவி நாயகன் - உயிர்த்தலைவன். மகளிர்க்கு வலம் துடித்தல் தீமை யாதலின் இது சீதைக்குத் தீமையை அறிவிப்பதாக ஆயிற்று. (34) |