5110. | 'ஆண் தகைஇராவணன் வளர்க்கும் அவ் அனல் ஈண்டில;பிறந்தவால், இனம் கொள் செஞ் சிதல்; தூண்ட அரு மணிவிளக்கு அழலும் தொல் மனை கீண்டதால், வானஏறு எறிய, கீழை நாள். |
ஆண்டகை இராவணன்- ஆண்மையுடைய இராவணன்; வளர்க்கும் அவ் அனல் - வளர்க்கின்ற வேள்விக் கனல்; ஈண்டில - வளரவில்லை (வேள்விக்குண்டத்தில்); இனம் கொள் செஞ்சிதல் - கூட்டமான செங்கரையான்கள்; பிறந்த - உற்பத்தியாகிவிட்டன; தூண்ட அரு மணி விளக்கு - தூண்டுதலை வேண்டாத தீபங்கள்; அழலும் தொல் மனை - ஒளிவீசும் பழைய அரண்மனையானது; கீழைநாள் வான ஏறுஎறிய - விடியற்காலை பேரிடிகள் தாக்கப் பெற்றதால்; கீண்டது - பிளக்கப்பட்டு இடிந்தன. கீழைநாள் -நாளின் கீழ்ப்பகுதி வைகறைவிடியல். மேல்பகுதி - மாலையாகும். (42) |