சீதையின்வருத்தத்தை அனுமன் காணுதல். 5129. | ஆயிடை,உரை அவிந்து, அழகன் தேவியும், தீ அனையர் முகம்நோக்கித் தேம்பினாள்; நாயகன் தூதனும்,விரைவில் நண்ணினான், ஓய்விலன், உயர்மரப் பணையின் உம்பரான். |
ஆயிடை - அவ்விடத்தில்;அழகன் தேவியும் - இராமபிரானின் தேவியாகிய பிராட்டி; உரை அவிந்து - பேச்சு ஒடுங்கி; தீ அனையவர் முகம் - நெருப்புப் போன்ற அரக்கிகளின் முகங்களை; நோக்கி - பார்த்து; தேம்பினாள் - மனங் கலங்கினாள் (அப்போது); நாயகன் தூதனும் - இராமபிரானின் தூதனான அனுமனும்; ஓய்விலன் - தாமதிக்காமல்; விரைவில் நண்ணினான் - வேகமாக வந்து (பிராட்டியிருந்த); உயர் - உயர்ந்த; மரப் பணையின் உம்பரான் - மரக்கிளையை அடைந்தவன் ஆனான். பிராட்டி இருந்தமரம் சிஞ்சுகமரம் என்று கூறுகின்றனர். சிஞ்சுகம் - நூக்கம் என்று அகராதி பேசும். சிஞ்சுகம் அசோகம் போலும். (61) |