5131. | விரி மழைக் குலம் கிழித்து ஒளிரும் மின் என, கரு நிறத்துஅரக்கியர் குழுவில், கண்டனன்-- குரு நிறத்து ஒருதனிக் கொண்டல் ஊழியான் இரு நிறத்துஉற்றவேற்கு இயைந்த காந்தத்தை. |
ஒரு தனி - ஒப்பற்றசிறப்புற்ற; குரு நிறத்து - ஒளி பொருந்திய நிறத்தை உடைய; கொண்டல் - மேகம் போன்ற; ஊழியான் - யுகத்தின் தலைவனாகிய இராமபிரானின்; இருநிறத்து உற்ற - பெரிய மார்பி்லே தைத்த; வேற்கு - பிரிவுத் (துன்பமாகிய) வேலைப் பறித்தெடுக்கும்; இயைந்த காந்தத்தை - பொருந்திய காந்தமாமணி போன்ற பிராட்டியை; கருநிறத்து அரக்கியர் குழுவில் - கரு நிறத்தைப் பெற்ற அரக்கிமார்களின் கூட்டத்தில்; விரிமழைக்குலம் - பரந்த மேகக் கூட்டத்தை; கிழித்து ஒளிரும் - பிளந்து கொண்டு விளங்குகின்ற; மின் என - மின்னலைப் போல; கண்டனன் - பார்த்தான். மார்பில்பாய்ந்த இரும்புத் துண்டுகளை எடுக்கப் பயன்படும் காந்தம் போல இராமனின் துன்பம் நீக்கும் பிராட்டி என்க. "வரம் எனும் அயில்வேல் --- இப்பொழுது அகன்றது. குலப்பூண் --- ஆரம் ஆம் காந்தமாமணி இன்று வாங்க" எனும் தசரதன் மொழியைக் காண்க (கம்ப. 10068) கொண்டல் ஊழி - ஓர் ஊழி போலும் - பரிபாடல் கொண்டும், புராண வழக்குக் கொண்டும் ஆய்தல் வேண்டும். 'இரு நிறத்துற்ற வெற்கு இயைந்த காந்தத்தை' என்ற சுவடிப்பாடம் கொண்டு முன்னுள்ளோர் பலரும் உரை தடுமாறினர் - 'வேற்கு' எனச் சுவடி எழுத்தின் உண்மைகாட்டி உரை கண்டார் வாகீசகலாநிதி. கி.வா. ஜகந்நாதன் அவர்கள். (63) |