5144. | 'செல்வமோஅது ? அவர் தீமையோ இது ? அல்லினும்பகலினும் அமரர் ஆட் செய்வார், ஒல்லுமோஒருவர்க்கு ஈது ? உறுகண் யாது இனி ? வெல்லுமோதீவினை, அறத்தை மெய்ம்மையால் ?' |
(அரக்கர்களுக்கு) அல்லினும்பகலினும் - இரவுப் போதிலும் பகற்போதிலும்; அமரர் ஆட் செய்வார் - தேவர்கள் அடிமைத் தொழில் புரிவார்கள்; அவர் செல்வமோ அது - அவர்களுடைய செல்வமோ அப்படி உள்ளது; அவர் தீமையோ இது - அவர் செய்கின்ற கொடுமையோ இப்படியுள்ளது; ஈது ஒருவர்க்கு ஒல்லுமோ - இந்த நிலைமையானது ஒருவருக்கு அடுக்குமா; தீவினை - தீவினையானது; அறத்தை - தருமத்தை; வெல்லுமோ - வென்றுவிடுமோ (வெல்லாது ஆதலால்); இனி உறுகண் யாது - இனிமேல் உலகத்திற்குத் துன்பம் ஏது ? 'அறம் வெல்லும்பாவம் தோற்கும்' என்ற உண்மை காவியத்தில் அங்கங்கே கலியால் சுட்டிச் செல்லப் படுகிறது. (76) |