4867. 

விளரிச் சொல்லியர் வாயினால்
     வேலையுள்மிடைந்த
பவளக் காடுஎனப்பொலிந்தது;
     படைநெடுங்கண்ணால்,
குவளைக்கோட்டகம் கடுத்தது;
     குளிர்முகக்குழுவால்
முளரிக் கானமும்ஒத்தது-
     முழங்குநீர்இலங்கை.

     முழங்குநீர்இலங்கை - ஒலிக்கும் கடலால்சூழப்பெற்ற இலங்கை;
விளரிச் சொல்லியர் - விளரிப்பண் போன்ற மொழி பேசும் அரக்கியர்களின்;
வாயினால் - (சிவந்த) வாயினால்; வேலையுள் மிடைந்த -  கடலில்
நெருங்கிக்கிடக்கும்; பவளக் காடு எனப்பொலிந்தது -  பவளக்காடுபோல்
விளங்கிற்று; படைநெடுங்கண்ணால் - (அரக்கியரின்) வேல்போன்ற
கண்களால்; (இலங்கை) குவளைக் கோட்டகம் கடுத்தது - குவளைப் பூக்கள்
மலர்ந்த பொய்கையை ஒத்திருந்தது; குளிர்முகக் குழுவால் - (அரக்கியரின்)
குளிர்ந்த முகங்களின் கூட்டத்தால்; முளரிக்கானமும் ஒத்தது - தாமரைக்
காட்டையும் போன்றது.

     கோட்டகம் -பொய்கை. வாயினால் என்பதை 'ஓதியால்' என்று பாடம்
கொண்டு சிவந்த கூந்தலால் பவளக்காடு போலும் எனப் பொருள் கூறலும்
ஒன்று.                                              (33)