5196. | 'இருவர் என்று இகழ்ந்தனைஎன்னின், யாண்டு எல்லை, ஒருவன் அன்றேஉலகு அழிக்கும் ஊழியான்; செரு வரும்காலை, என் மெய்ம்மை தேர்தியால்- பொரு அருந் திருஇழந்து, அநாயம் பொன்றுவாய். |
பொரு வரும் -ஒப்புமையில்லாத; திருவிழந்து - செல்வத்தை இழந்து; அநாயம் - அநியாயமாக; பொன்றுவாய் ! - உயிர் அழியப் போகின்றவனே ! இருவர் என்று - இராமலக்குவர்களை இருவர் தானேஎன்று; இகழ்ந்தனை என்னின் - இகழ்ந்து பேசினால் (அது முறையன்று); யாண்டு எல்லை - யுக வருடங்களின் முடிவிலே; உலகு அழிக்கும் - உலகங்களை அழிக்கின்ற; ஊழியான் - ஊழியின் தலைவனான சிவபிரான்; ஒருவன், அன்றே - ஒருவன் அல்லவா; செருவரும் காலை - யுத்தம் வரும் சமயத்தில்; என் மெய்ம்மை - என்னுடைய மொழியின் உண்மையை; தேர்தி - ஆராய்ந்து அறிவாய் (என் மொழியின்படி நடவாய் எனின்). ஊழியான் -சிவபிரான். ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன் என்று திருவெம்பாவை பேசும். அநாயம் - அநியாயம். 'ஆவி அநாயமே உகுத்து என் ? ஐய' (கம்ப. 7412) (128) |