5199. | 'இப் பெருஞ் செல்வம் நின்கண் ஈந்த பேர் ஈசன், யாண்டும் அப் பெருஞ்செல்வம் துய்ப்பான், நின்று மா தவத்தின் அன்றே ? ஒப்பு அருந்திருவும் நீங்கி, உறவொடும் உலக்க உன்னி, தப்புதி அறத்தை;ஏழாய் ! தருமத்தைக் காமியாயோ ? |
ஏழாய் ! -அறிவற்றவனே ! நின்கண் - நின்னிடத்தில்; இப் பெரும் செல்வம் - இந்தப் பெரிய செல்வத்தை; ஈந்த - வழங்கி; பேரீசன் - மகாதேவனான சிவபெருமான்; யாண்டும் மாதவத்தின் நின்று - எப்பொழுதும் பெரிய தவத்தில் நிலைத்திருந்து; அப்பெரும் செல்வம் - அந்தப் பெரிய செல்வத்தை; துய்ப்பான் அன்றே - அனுபவித்துக் கொண்டுள்ளான் அல்லவா (அங்ஙனம் இருக்க); ஒப்பரும் திருவும் - ஒப்பற்ற செல்வமும்; நீங்கி - உன்னை விட்டு விலகி; உறவொடும் - சுற்றத்தோடும்; உலக்க உன்னி - அழிய நினைந்து; அறத்தைத் தப்புதி - அறத்திலிருந்து தவறுகிறாய்; தருமத்தைக் காமியாயோ - அறத்தை விரும்பமாட்டாயா? சிவபெருமான் தவத்திலிருப்பது வெளிப்படை. அவன் துய்க்கும் செல்வம் நிலைபேறானது சிவமாயிருத்தல். தப்புதல் - தவறுதல். இறைவன் உனக்குச் செல்வத்தை வழங்கியது நீ தவத்திலிருந்து உயர்வடையவல்லவா, என்று உரை கூறினர் பலர். ஈசன் செல்வம் ஈந்தது (நீ) யாண்டும் மாதவத்தின் நின்று அப் பெரும் செல்வம் துய்ப்பான் அன்றே - எனக் கூட்டிப் பொருள் கொள்வர். (131) |