5200. | 'மறம் திறம்பாத தோலா வலியினர்எனினும், மாண்டார், அறம்திறம்பினரும், மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே ? பிறந்து இறந்துஉழலும் பாசப் பிணக்குடைப் பிணியின் தீர்ந்தார், துறந்து அரும்பகைகள் மூன்றும் துடைத்தவர், பிறர் யார் ? சொல்லாய் ! |
மறம் திறம்பாத- வீரத்திலிருந்து விலகிச் செல்லாத; தோலா - தோல்வியடையாத; வலியினர் எனினும் - வல்லமையுடையவர் என்றாலும்; மாண்டார் - அழிந்து போனவர்கள்; அறம் திறம்பினரும் - தருமத்திலிருந்துவிலகினவரும்; மக்கள் - மக்களிடம் காட்ட வேண்டிய; அருள் திறம்பினரும்- கருணையிலிருந்து விலகின வரும்; அன்றே - அல்லவா ? துறந்து -ஆசைகளை விலக்கி; அரும்பகைகள் மூன்றும் - கொடியமுப்பகைகளையும்; துடைத்தவர் - அழித்தவர்களே; பிறந்து இறந்து -உலகிலே பிறந்தும் இறந்தும்; உழலும் - சுழன்று கொண்டிருக்கும்; பாசப்பிணக்கு உடை - பாசக்கட்டுடன் கூடிய; பிணியின் தீர்ந்தார் - நோயிலிருந்து விலகினார்கள்; பிறர் யார் - மற்றவர் யார் ? சொல்லாய் - சொல்வாயாக. வலிமை வாழும்என்பது இராவணன் கருத்து. அறம் வாழும் என்பது பிராட்டியின் கொள்கை. பாசப்பிணக்கு - பாசக்கட்டு. பாசம், கயிறு, பற்று பாசமாம் பற்று (திருவாசகம்) பாசப் பிணிப்பால் ஆன்மா பசு ஆகிறது. முப்பகை - காமவெகுளி மயக்கம். அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது வாழ்க, என்பது பிராட்டியின் செவியறிவுறுஉ. (132) |