5204.

'கடிக்கும் வல் அரவும் கேட்கும், மந்திரம்;
                          களிக்கின்றோயை,
"அடுக்கும், ஈது அடாது" என்று, ஆன்ற ஏதுவோடு
                          அறிவு காட்டி,
இடிக்குநர்இல்லை; உள்ளார், எண்ணியது எண்ணி,
                           உன்னை
முடிக்குநர்;என்றபோது, முடிவு அன்றி முடிவது
                           உண்டோ ?'

     கடிக்கும் -(காரணமின்றி) கடிக்கும் இயல்பைப் பெற்ற; வல் அரவும் -
கொடும் பாம்பு கூட; மந்திரம் கேட்கும் - மந்திரத்துக்கு அடங்கும்;
களிக்கின்றோயை - செருக்குக் கொண்ட உன்னை; ஈது அடுக்கும் - இது
செய்யத் தக்கது; (ஈது) அடாது - இது செய்யத்தகாதது; என்று - என்று கூறி
(அதை மெய்ப்பிக்க); ஆன்ற - பழமையான; ஏதுவொடு - காரணத்துடன்
கூடிய; அறிவு காட்டி - அறிவைக் காண்பித்து; இடிக்குநர் - நெருக்கி
வற்புறுத்துபவர்கள்; இல்லை - இங்கே இல்லை; உள்ளார் - (உன் அவையில்)
இருப்பவர்கள்; எண்ணியது எண்ணி - நீ கருதியதையே மதித்து; உன்னை
முடிக்குநர் -
உன்னை அழிப்பவர்களே; என்ற போது - என்று அமைந்த
காலத்தில்; முடிவு அன்றி - அழிவு அல்லாமல்; முடிவது உண்டோ -
(வேறுவிதமாக) நிறைவேறுவது உள்ளதா ?

     "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்"
என்னும் குறள் (448) இப்பாடலுக்கு மூலம். இடிப்பார் - கழறுதற் குரியார்
(அழகர்) அடிச்சுப் புத்தி சொல்கிற பெரியோர் (பரிதி) 'இராவணன் பாம்பினும்
கொடியவன்' என்பது குறிப்பெச்சம். தலைவன் கருதியதையே மதிப்பவர்
அமைச்சராய் இருந்து பயனில்லை. வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று
உரைத்தல் வேண்டும்.                                      (130)