5212. | 'மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார், மீண்டு, யான் என்பதுஅறிந்தால் வாரார்; ஏழைமை, எண்ணி நோக்கல்; தேன் என்பதுஅறிந்து சொல்லாய் ! தேவர்தாம் யாவரே, எம் கோன் என்பதுஅறிந்த பின்னை, திறம்புவார், குறையின் அல்லால் ? |
தேன் என்பது -தேன்என்று சிறப்பித்துப் பேசும் பொருளும்; அறிந்த- (இன்பம்) அனுபவிக்கும்படியான; சொல்லாய் ! - சொற்களைப் பேசுபவளே;மான் என்பது அறிந்து போன - மான் என்பதை அறிந்து அதன்பின்சென்ற; மானிடர் ஆவார் - மனிதராக இருக்கின்றவர்கள்; மீண்டு - திரும்பிவந்து; யான் என்பது அறிந்தால் - (உன்னைக் கவர்ந்து சென்றது) யான்என்று அறிந்தால்); வாரார் - இலங்கைக்கு வரமாட்டார்கள்; எண்ணி நோக்கல் - (அவர்கள்) வருவார் என்று நினைந்து எதிர்பார்த்தல்; ஏழைமை - அறியாமையாகும்; தேவர்தாம் - எந்தத் தேவர்களாக இருந்தாலும்; எம் கோன் என்பது அறிந்த பின்னை - இச் செயல் செய்தவன் எம்தலைவனான இராவணன் என்று அறிந்த பிறகு; குறையின் அல்லால் - மனம் தளர்வாரேயல்லாமல்; யாவர் திறம்புவார் - எவர் முறை தவறி நடப்பார். தேனும்அனுபவிக்கும் இனிய மொழி. இங்ஙனம் கூறுவது கவிச் சக்கரவர்த்தியின் இயல்பு. "யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவையாம் என்னக்கேட்கும் மென் மழலைச் சொல்" (கம்ப. 974) என்று கூறப்பெற்றது. மான் என்பது அறிந்து போன என்பதில் உள்ள அறிதல் அசதி மொழி - மாயமானுக்கும் உண்மை மானுக்கும் வேறுபாடு அறியாதவர்கள் என்றபடி. திறம்புதல் - கடந்து வருதல் (முறை தவறுதல்) குறைதல் - மன எழுச்சி தளர்தல். யாவர் திறம்புவார் என்று முடிக்க. கோன் என்பது பின்னைத் திறம்புவர் குறையின் அல்லார் - ஒரு காரியம் நான் செய்தேன் என்றால் அத் தேவர்கள் அறிந்தாலும் எங்கள் இறைவன் செய்தான் என்பர் அல்லாமல் மாறுபடார். தாழ்வர் என்பது பழைய உரை (அடை - பதி) (144) |