5214. | 'மூவரும் தேவர்தாமும் முரண் உக முற்றும் கொற்றம், பாவை ! நின்பொருட்டினால், ஓர் பழி பெற, பயன் தீர் நோன்பின் ஆ இயல்மனிதர்தம்மை அடுகிலேன்; அவரை ஈண்டுக் கூவி நின்று,ஏவல் கொள்வேன்; காணுதி-குதலைச் சொல்லாய் ! |
பாவை ! -பதுமை போன்றவளே; குதலைச் சொல்லாய் ! - இனிய மொழி பேசுபவளே ! மூவரும் - மும்மூர்த்திகளும்; தேவர்தாமும் - (மற்றைய) தேவர்களும்; முரண் உக - வலிமை குறைய; முற்றும் கொற்றம் - நிறைவு பெற்ற என் வெற்றியானது; நின்பொருட்டினால் - உன் காரணமாக; ஓர் பழி பெற - ஒரு பழிச் சொல்லை அடையும் வண்ணம்; பயன்தீர் - பயனில்லாத; நோன்பின் - தவத்தையுடைய; ஆ இயல் மனிதர் தம்மை - பசுவின் தன்மை கொண்ட மனிதரை; அடுகிலேன் - கொல்லேன்; அவரை - அந்த இராமலக்குவரை; கூவி நின்று - அழைத்து; ஈண்டு ஏவல் கொள்வென் - இந்த இடத்தில் அவர்கள் செய்யும் பணிகளை ஏற்றுக் கொள்வேன்; காணுதி - நீ அதைப் பார். உன்பால் நான்கொண்ட காதலால் என் வெற்றி பழிபெற்றது. அவர்களைக் கொல்லேன் என்று கூறிய இராவணன் தன் காதலை விவரிக்கிறான். அமைதி, ஆவியல், என்று பேசப்படுகிறது. பாவை - பதுமை (விக்கிரகம்) குதலை - இனிய மொழி - கண்டு படு குதலைப் பசுங்கிளி - (மீனாட்சி தமிழ் 7-1) குதலை - இளமொழி என்று அரும்பதவுரை பேசும் (சிலம்பு - 30 - 114) (146) |