சந்தக் கலித்துறை 5221. | முன் முன் நின்றார், கண் கனல் சிந்த முடுகுற்றார்; மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி, 'கொல்மின் !கொல்மின் ! கொன்று குறைத்து, குடர் ஆரத் தின்மின் !தின்மின் ! என்று தெழித்தார், சிலர் எல்லாம். |
முன் முன்நின்றார் - பிராட்டியின் முன்னாலேநின்றவர்களாகிய; சிலர் எல்லாம் - சில அரக்கிமார்கள்; கண்கனல் சிந்த - கண்களிலிருந்து நெருப்புச் சிதற; முடுகுற்றார் - (பிராட்டியின்பால்) விரைந்துபோய்; மின்மின் என்னும் - மின்னுகின்ற மின்னல் போலும்; சூலமும் வேலும் - சூலத்தையும் வாளையும்; மிசை ஓச்சி - தலைக்கு மேலே உயர்த்தி (இவளை); கொல்மின் கொல்மின் - கொல்லுங்கள் கொல்லுங்கள்; கொன்று குறைத்து - கொன்று துண்டுகளாக்கி; குடர் ஆர - வயிறு நிரம்ப; தின்மின் தின்மின் - தின்னுங்கள் தின்னுங்கள்; என்று - என்று கூறி; தெழித்தார் - அரட்டினார்கள். முடுகுற்றார் -முற்றெச்சம், வினை எச்சப் பொருளில் வந்துள்ளது. மிசை - தலைக்கு மேலே. ஓச்சி - உயர்த்தி. மின்மின் - மின்னும் மின்னல். வெல்லும் வேலை வெவ்வேல் என்பதுபோல் வந்தது. குறைத்தல் - துண்டித்தல். இச் சந்தக்கலித்துறை மா - மா - விளம் - மா - காய் என்னும் ஐந்து சீர்களைப் பெற்றுவரும். இதனை வடநூலார் 'மத்த மயூரம்' என்பர். இத்தகு பாக்கள் இந்நூலில் 154 இடங்களில் காண்கிறோம் (மணிமலர் 76). (153) |