5233. | 'வாராது ஒழியான் எனும் வண்மையினால், ஓர் ஆயிர கோடிஇடர்க்கு உடையேன்; தீராய் ஒரு நாள்வலி - சேவகனே ! நாராயணனே ! தனிநாயகனே ! + |
(இராமபிரான்) வாராது ஒழியான்- இங்கேவாராமல் அமைதி பெறான்; எனும் - என்கின்ற ; வண்மையினால் - அவன் கருணை மிகுதியால்; ஓர் ஆயிர கோடி - பல்கோடியாகப் பெருகிவரும்; இடர்க்கு உடையேன் - துன்பங்கட்குத் தளராமல் உள்ளேன்; சேவகனே - வீரம் உடையவனே; நாராயணனே - திருமால் போன்றவனே; தனி நாயகனே - ஒப்பற்ற தலைவனே; ஒருநாள் - ஒருதினம்; வலி தீராய் - என்னுடைய நோவைத் தீர்ப்பாயாக. அரசர்களைத்திருமாலாகப் பேசுவது மரபு. அது பற்றித் திருமால் என்று கூறினாள் என்றும் கொள்ளலாம். இதனைப் பூவை நிலை' என்று தமிழ் மரபு பேசும். வலி - நோவு. 'வலியானே யான்பட்ட வலிகாணவாராயோ' (கம்ப. 2833.) இப்பாடலில் உள்ள 'வலி' அனைவர்க்கும் தீராவலியாக உள்ளது. ஏகநாயகன், தனி நாயகன் (கடவுள்) 'ஏகநாயகனை இமயவர்க்கு அரசை' (திருவிசை - சேந்தன் 1-1) (6) |