5236. | 'முடியா முடி மன்னன் முடிந்திடவும் படி ஏழும் நெடுந்துயர் பாவிடவும், மடியா நெறி வந்துவனம் புகுதும் கொடியார் வரும் என்று, குலாவுவதோ ?' |
முடியா - இறப்பு இல்லாத;முடிமன்னன் - முடி சூடிய தசரதன்; முடிந்திடவும் - இறந்து படவும்; படி ஏழும் - ஏழு உலகங்களிலும்; நெடுந்துயர் - பெருந்துன்பம்; பாவிடவும் - பரவிப் பெருகவும்; (இவற்றால் மனம் இரங்காமல்) மடியா நெறி வந்து - முடிவற்ற வழியிலே வந்து; வனம் புகுதும் - காட்டிலே வாழப்புகுந்த; கொடியார் - கொடியவரான இராமன்; வரும் என்று - வந்து காண்பான் என்று (நீங்கள்); குலாவுவதோ - மகிழ்ச்சியடைவதா. மன்னன்இறந்தும், மக்கள் கெஞ்சியும் இரங்காத மனம் என் பொருட்டா, இரங்கப் போகிறது என்கிறாள். தலைவி, ஊடலால் தலைவனைக் 'கொடியன்' என்று கூறுவாள். கடுவனும் அறியும் அக்கொடியோனையே (குறுந் - 26) தமிழ்த்தெய்வம் உ.வே.சா அங்கு வரைந்தவற்றைக் காண்க. கடியன், கொடியன் நெடியமால் என்று சடகோபர் பேசினார் (திருவாய் 5-3-5) செய்யும் எனும் வாய்பாட்டு முற்று பலர்பாலில் வாராது. கொடியார் என்று பாடம் கொள்வது நேரிதன்று; 'கொடியான்' என்ற பாடம் சிறப்புடைத்து. (9) |