5278. | 'அண்ணல்தன் திரு முகம் கமலம் ஆம் எனின், கண்ணினுக்கு உவமைவேறு யாது காட்டுகேன் ? தண் மதி ஆம் எனஉரைக்கத் தக்கதோ, வெண் மதிபொலிந்தது மெலிந்து தேயுமால் ? |
அண்ணல்தன்திருமுகம் - இராமபிரானின்திருமுகமானது; கமலம் ஆம் எனின் - தாமரையை ஒக்கும் என்றால்; கண்ணினுக்கு - அப்பெருமானின் கண்களுக்கு; உவமை - ஒப்புமையாக; வேறுயாது காட்டுகேன் - வேறு எதை எடுத்துக் கூறுவேன் (அன்றி); வெண்மதி - வானத்தில் உள்ள சந்திரன்; பொலிந்தது - பொலிவுடன் இருந்தது (எனினும் அது); மெலிந்து தேயும் - ஒளி குன்றி அழியும் (ஆதலினால்); (திருமுகம்) தண்மதி ஆம் என - குளிர்ந்த சந்திரன் போலும் என்று; உரைக்கத் தக்கதோ - கூறுதல் தகுதியுடையதா. உரைத்தல்என்னும் தொழிற்பெயர் உரைக்க என்னும் எச்சம் போல் உள்ளது. பேசல் கூடாது என்பது பேசக்கூடாது என்று வருதலை நோக்கி அறிக. தொழிற் பெயர் எச்சம்போல் துலங்கலும் உளவே. (உரைச்சூத்திரம்) தண்மதி, சுட்டளவாக நின்றது. இனியர் புகழான் என்னும் பெயர்சொல்லுவான் குறிப்பால் அவன் என்னும் சுட்டுப்பெயர் மாத்திரை ஆயிற்று. என்றார். (சிந்தா - 6 உரை) அவர் கிளவியாக்கத்தில் 37 ஆம் சூத்திர விதிப்பாகக் கருதுவர். ஆல் - அசை. (51) |