அறுசீர் விருத்தம்

5279.

' "ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன்
                                  செவ்வாய்
நாரம் உண்டுஅலர்ந்த, செங் கேழ் நளினம்" என்று
                               உரைக்க நாணும்;

ஈரம் உண்டு,அமுதம் ஊறும் இன் உரை
                               இயம்பாதேனும்,
மூரல் வெண்முறுவல் பூவாப் பவளமோ,
                             மொழியற்பாற்றே ?

     ஆரமும் அகிலும்நீவி - சந்தனக்குழம்பும் அகிற் குழம்பும்
பூசப்பெற்று; அகன்ற தோள் அமலன் - விரிந்த தோள்களைப் பெற்ற
இராமபிரானின்; செவ்வாய் - சிவந்த வாயானது (தனக்கு நிகராக); நாரம்
உண்டு -
நீரை உட்கொண்டு; அலர்ந்த - மலர்ந்துள்ள; செங்கேழ் நளினம்
என்று உரைக்க -
சிவந்த நிறமுடைய தாமரை போலும் என்று கூறினால்;
நாணும் -
வெட்கம் அடையும்; (அங்ஙனம் இருக்க) ஈரம் உண்டு -
ஈரத்தன்மை பெற்று; அமுதம் ஊறும் - அமுதம் பெருகி; இன் உரை
இயம்பாதேனும் -
இனிய மொழிகள் பேசாவிடினும்; வெண்மூரல் -
வெள்ளிய பற்களால்; முறுவல் பூவா - புன்னகை மலராத; பவளம் -
பவளமானது; மொழியற் பாற்றோ - உவமையாகக் கூறத்தக்கதோ ?

     சிரிக்கத்தெரிந்த தாமரையே ஒவ்வாதபோது சிரிக்கத் தெரியாத பவளம்
ஒவ்வாதென்க. 'சிரித்த பங்கயம்' என்று முன்பு பேசப்பெற்றது நினைக்க.
நாணுதல் 'தாமரை' என்றும் கூறலாம். ஆரம் - சந்தனம். இங்கே குழம்பைக்
குறிக்கிறது. அகிற்கும் அதுவே. நாரம் - தண்ணீர். நார .. பொய்கை (சூடாமணி
25) பவளமோ, ஓகாரம் அசை. பாற்றோ, ஓகாரம் வினாப் பொருள் தந்தது.
பவளம் மொழியற் பாற்றோ என முடிக்க. ஈரம் - அன்பு. 'இன்சொலால் ஈரம்
அளைஇ' என்று தமிழ்மறை பேசும் (திருக்குறள் 91) மூரல் - பல். முறுவல் -
புன்னகை. பூவா - மலராத. 'புதியதோர் முறுவல் பூத்தாள்' (கம்ப. 2736) என்று
பேசப் பெற்றது.                                             (52)