அறுசீர் விருத்தம்(வேறு)

5280. 

'முத்தம்கொல்லோ ? முழு நிலவின்
     முறியின் திறனோ ? முறை அமுதச்
சொத்தின்துள்ளி வெள்ளி இனம்
     தொடுத்தகொல்லோ ? துறை அறத்தின்
வித்து முளைத்தஅங்குரம்கொல் ?
     வேறேசிலகொல் ? மெய்ம் முகிழ்த்த
தொத்தின்தொகைகொல் ? யாது என்று
     பல்லுக்குஉவமை சொல்லுகேன் ?

     பல்லுக்கு உவமை -இராமபிரானுடைய பற்களுக்கு உவமைகள்;
முத்தங் கொல்லோ -
முத்துக்களோ; முழுநிலவின் - முழுமதியினுடைய;
முறியின் திறனோ
 - துண்டுகளின் வகைகளோ; அமுதச் சொத்தின் -
அமுதமாகிய செல்வத்தின்; துள்ளி - துளியும்; வெள்ளி இனம் -
வெள்ளியின் கூட்டமும்; முறை - முறையாக; தொடுத்த கொல் - தொடுக்கப்
பெற்றனவோ; துறை அறத்தின் - பல்வேறு வகைப்பட்ட அறத்தினுடைய;
வித்து -
விதையிலிருந்து; முளைத்த அங்குரங்கொல் - தோன்றிய
முளைகளோ; மெய்முகிழ்த்த - சத்தியத்திலிருந்து தோன்றிய; தொத்தின்
தொகைகொல் -
பூங்கொத்தின் கூட்டமோ; வேறே சிலகொல் - இவற்றில்
வேறுபட்ட சிலபொருள்களோ; யாது என்று - (இவற்றுள்) எது என்று;
சொல்லுகேன் -
கூறுவேன்.

     இராமபிரான்பற்களுக்கு உவமைகள் முத்து முதலானவற்றுள் யாது
என்று கூறுவேன். முறி - துண்டு. 'நிலவின் வெண்முறி' (கம்ப. 4892) அறம்
முப்பத்திரண்டு, பெருமான் பற்களும் முப்பத்திரண்டு ஒப்பிட்டுக் காண்க. மெய்
- உண்மை. அறத்தின் வித்து என்றது அகிம்சையை. எல்லா அறங்களும்
அகிம்சையடிப்படையில் தோன்றியன. அறத்துக்கு மூலம் அகிம்சை என்க.
இப்பாடலில், அகிம்சையும் சத்தியமும் பேசப்பெற்றன. கொல்லோ - ஓ அசை.
சொத்து - இது முதலில் பொன்னை உணர்த்திப் பின் செல்வத்தை
உணர்த்திற்று. சொத்துற்று அமைந்த சுதை இல் நெடுஞ்சுவர் (பெருங்கதை 1-
34-231) தொத்து - கொத்து துறையறம் - பல்வகைப் பிரிவுடைய அறம்.
அங்குரம் - முளை.                                        (53)