5291. | இறந்தவர்பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ ? மறந்தவர்அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ ? துறந்த உயிர்வந்து இடை தொடர்ந்ததுகொல் என்கோ ? திறம் தெரிவதுஎன்னைகொல், இந் நல் நுதலி செய்கை ? |
இந் நல் நுதலிசெய்கை - அழகிய நெற்றியை உடையஇந்தப் பிராட்டியின் செய்கைக்கு; (உவமையாக) இறந்தவர் - நெறி கடந்து வாழ்ந்தவர்கள்; பிறந்த பயன் - பிறத்தலால் உண்டாகும் பயனை; எய்தினர் கொல் என்கோ - பெற்ற செய்கை என்று கூறுவேனோ; மறந்தவர் - தம்மையே மறந்தவர்கள்; அறிந்து - தம்மையும் தலைவனையும் அறிந்து; உணர்வு வந்தனர் கொல் என்கோ - பேருணர்வு பெற்ற செய்கை என்று கூறுவேனோ ? துறந்த உயிர் - உடலைவிட்டு நீங்கிய உயிர்; இடைவந்து - தக்க சமயத்தில் வந்து; தொடர்ந்தது கொல் என்கோ - ஒன்றுபட்டது என்று கூறுவேனோ ? திறம் - பிராட்டியின் தன்மையை; தெரிவது என்னை - அறிவது எப்படி. எய்தினர்,வந்தனர், என்னும் முற்றுக்கள் பெயரெச்சப் பொருள் தந்தது. இன்றேல் இரண்டு எழுவாயைச் சந்திக்க நேரும். இருவகை முற்று ஈரெச்சம் ஆகலும் (இலக்கணக் கொத்து 82) எய்திய செய்கை, வந்த செய்கை என அமையும். திருவாழியைக் கண்ட பிராட்டியின் செயல் 6 பாடல்கள் பேசும். மறந்தவர் - தம்மை மறந்தவர்கள். தம்மை மறந்தவர்கள், தம்மையும் தலைவனையும் அறிந்து பெறுவதே உணர்வு. பிறந்த பயன், என்பது பிறத்தலால் பெறவேண்டிய பயன் (தொல், சொல் 236) கொல், அனைத்தும் அசை. (64) |