5294. | மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர் நீக்கி, நிறைகண் இணை ததும்ப, நெடு நீளம் நோக்கும்;நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்; மேக்கு நிமிர்விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். |
(பிராட்டிமோதிரத்தை) மோக்கும் -மோந்துபார்ப்பாள் (அதை); முலை வைத்து - தனங்களிலே வைத்து; உற முயங்கும் - நன்றாகத் தழுவிக் கொள்வாள்; ஒளிர் நல்நீர் - ஒளிர்கின்ற ஆனந்தக் கண்ணீர்; நிறை கண் இணை ததும்ப- அழகு நிறைந்த இரண்டு கண்களில் ததும்ப; நீக்கி - அதைத் துடைத்துக்கொண்டு; நெடு நீளம் நோக்கும் - நீ்ண்ட பறவைக் கூட்டைப் பார்ப்பாள்;நுவலக் கருதும் - (பறவைக் கூட்டால் வந்த நினைவை) கூறநினைப்பாள்;ஒன்றும் நுவல்கில்லாள் - ஒன்றும் கூற முடியாமல்; மேக்கு - மிகுதியாக; நிமிர் விம்மிலள் - கிளர்ச்சி பெற்ற அழுகை உடையவளாய்; விழுங்கல்உறுகின்றாள் - அதை அடக்க முயல்கின்றாள். நீளம் - பறவைக்கூடு. பறவைக் கூட்டை இராமபிரான் நோக்கியது ! நிந்தையில் சகுந்தங்கள் நீளம் நோக்கின. அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான்' (கம்ப. 2086) என்று பேசப்பெற்றது அஃது இப்போது பிராட்டிக்கு நினைவு வந்தது போலும். 'நெடுநீளம் நோக்கும்' என்பதற்குநெடுநேரம் மோதிரத்தைப் பார்ப்பாள் என்றும் உரை கொள்ளலாம். மாலைக் காலத்தில் பறவைகள் தம் கூட்டை அடை தலை நோக்கும் போது உணர்வு முகிழ்க்கும். பெருமான் என மகிழ்வதும், அல்ல என்று வருந்துவதும், ஆம் என்று ஊடுவதும், அல்ல என்று வாய் மூடுவதும் மோதிரத்தை விழுங்குவோம் என்பதும் பொருள். என்பது பழைய வுரை (அடை - பதி). (67) |