5295. | நீண்டவிழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம் பூண்டது, ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே ! ஆண்தகைதன்மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் தீண்டு அளவில்,வேதிகை செய் தெய்வ மணிகொல்லோ ? |
நீண்ட விழிநேரிழைதன் - நீண்ட கண்களையும்அழகிய ஆபரணங்களையும் உடைய பிராட்டியின்; மின்னின் நிறம் எல்லாம் - மின்னல் போலப் பசலை படர்ந்த மேனி முற்றும்; ஒளிர் - விளங்குகின்ற; பொன் அனைய - பொன்னை ஒத்த; பொம்மல் நிறம் பூண்டது - பொலிவுடைய நிறத்தைப் பெற்றது; (இந்த மாற்றம்) மெய்யே - உண்மையே (ஆதலால்); ஆண் தகைதன் - ஆடவருள் தலைசிறந்த இராமபிரானின்; மோதிரம் - மோதிரம் ஆனது; அடுத்த பொருள் எல்லாம் - தன்னைச் சார்ந்த எல்லாப் பொருள்களையும்; தீண்டு அளவில் - தொட்ட மாத்திரத்தில்;வேதிகை செய் - பொன்னாக மாற்றுகின்ற; தெய்வமணி கொல் -தெய்வத்தன்மை பெற்ற ரச குளிகையோ. வேதிகை செய்தல்- ஒரு பொருளை வேறு பொருளாக மாற்றுதல். பரிசவேதி செம்பைப் பொன்னாக்கும் என்பது சித்தரின் கொள்கை. இரச குளிகையினால் களிம்பு அற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும். (சிவ.சித்தி 11.2.9.) மின் நிறம் பொன்நிறம் ஆயிற்று. மோதிரம் பரிசவேதியோ என்று கவிச்சக்கரவர்த்தி வியக்கின்றார். (68) |