இராமலக்குவரைப்பற்றி வினவிய சீதைக்கு
அனுமன்விடையிறுத்தல். 

5300.

மீண்டு உரைவிளம்பலுற்றாள், 'விழுமிய
                         குணத்தோய் ! வீரன்
யாண்டையான்,இளவலோடும் ? எவ் வழி எய்திற்று
                         உன்னை ?
ஆண்தகை, அடியேன்தன்மை யார் சொல,
                       அறிந்தது ?' என்றாள்;
தூண் திரள் தடந்தோளானும், உற்றது
                        சொல்லலுற்றான்:

(பிராட்டி)

     மீண்டு உரைவிளம்பலுற்றாள் - மறுபடியும் பேசத்தொடங்கி;
(அனுமனை நோக்கி) விழுமிய குணத்தோய் - சிறந்த குணங்களைப் பெற்ற
அனுமனே; வீரன் - இராமபிரான்; இளவலோடும் யாண்டையான் - இளைய
பெருமாளுடன் எங்கே உள்ளான் (இராமபிரான்); உன்னை எவ்வழி எய்திற்று
-
உன்னை எவ்விடத்தில் சந்தித்தது; ஆண் தகை - இராமபிரான்; அடியேன்
தன்மை -
என்னுடைய நிலையை; யார் சொல அறிந்தது - எவர் கூற
அறிந்தது; என்றாள் - என்று வினவினாள் (அதுகேட்ட); திரள் தூண் -
திரண்ட தூண் போன்ற; தடந்தோளான் - அகன்ற தோளை உடைய
அனுமனும்; உற்றது சொல்லல் உற்றான் - நிகழ்ந்ததைக் கூறத்
தொடங்கினான்.

     காதல் மகளிர்தம்மை 'அடிச்சி' என்று கூறிக் கொள்வதைப்
பிரபந்தத்தில் காண்கிறோம். தாமரைக் கையை.... அடிச்சியேம் தலை மிசை
அணி' என்று சடகோபநாயகி பேசினாள் (திருவாய் 10.3.5) அதை அறிந்த
பிராட்டி தன்னை 'அடியேன்' என்றாள்.                        (73)