5302. | ' "இக் குரல் இளவல் கேளாது ஒழிக" என, இறைவன் இட்டான் மெய்க் குரல்சாபம்; பின்னை, விளைந்தது விதியின் வெம்மை; "பொய்க் குரல்இன்று, பொல்லாப் பொருள் பின்பு பயக்கும்" என்பான், கைக் குரல் வரிவில்லானும், இளையவன் வரவு கண்டான். |
இறைவன் -இராமபிரான்; இளவல் இக்குரல் - தம்பியாகிய இலக்குவன் இக் குரல் ஒலியை; கேளாது ஒழிக என - கேட்காமற் போகட்டும் என்று கருதி; சாப மெய் குரல் - தன் வில்லின் மெய்யான ஒலியை; இட்டான் - உண்டாக்கினான்; பின்னை (உம்) - அங்கனம் உண்டாக்கிய பின்னும்; விதியின் வெம்மை - விதியினுடைய விருப்பம்; விளைந்தது - நிறைவேறிற்று; இன்று - இன்றைய தினம் தோன்றிய (அரக்கனின்); பொய்க்குரல் - பொய்யான (மானின்) குரலால்; பின்பு - பின்னர்; பொல்லாப் பொருள் - தீய செயலானது; பயக்கும் என்பான் - நிகழப் போகிறது என்று கருதிய; கைக்குரல் வரி வில்லானும் - கையில் பொருந்திய வில்லேந்திய இராமபிரான்; இளையவன் வரவு - இலக்குவன் வருதலை; கண்டான் - பார்த்தான். மாயமான் குரல்கேளாமல் போகட்டும் என்று இராமபிரான் வில் ஒலியை எழுப்பியது முன்பு பேசப்படவில்லை. இங்ஙனம் முன்பு பேசாததைப் பின்பு கூறுவது கவிச்சக்கரவர்த்தியின் இயல்பு. வெம்மை - விருப்பம். 'வெம்மை வேண்டல்' என்று தொல்காப்பியம் பேசும். (தொல் உரி 334) வெப்பம் என்றும் கூறலாம். பொய்க்குரல் இன்று - பொய்க்குரல் போல் இல்லை என்றும் கூறப் பெற்றது. பொல்லாப் பொருள் - தீய செயல். ஒரு பொருள் சொல்லுவதுடையேன் (கலி 8) (75) |