5314.

' "பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க
                                  அன்றோ,
என் மான்அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் ?"
                                  என்னா,
நன் மான்களைநோக்கி, "நும் நாமமும் மாய்ப்பென்
                                  இன்றே,
வில் மாண்கொலை வாளியின்" என்று, வெகுண்டு
                                  நின்றான்.

     பொன்மான்உருவால் - (அரக்கன்) பொன் போலும் மான்
வடிவத்தால்; சில மாயை புணர்க்க அன்றோ - சில மாயைகளைச்
செய்ததனால் அல்லவா; என்கண் - என்னிடத்திலிருந்து; என்மான் -
என்னுடைய மான் போன்ற சீதை; இப்பொழுது  - இந்தச் சமயத்தில்;
அகல்வுற்றனள் -
பிரிந்து சென்றனள்; என்னா - என்று கூறி; நன்
மான்களை நோக்கி -
பிறர்க்குத் தீங்கு செய்யாத மான்களைப் பார்த்து;
இன்றே -
இன்றைய தினமே; வில் மாண் கொலை வாளியின் - வில்லிலே
மாட்சிமைப் பட்ட கொலைத் தொழில் செய்யும் அம்பாலே; நும் நாமமும் -
உங்களுடைய பெயரையும்; மாய்ப்பேன் - அழிப்பேன்; என்று வெகுண்டு
நின்றான் -
என்று கூறிச் சீறி நின்றான்.

     புணர்த்த -செய்ய. தூமமென் குழலியர் புணர்த்த சூழ்ச்சியால்
(திருவவதாரம் 47) 'வில் மாண்' என்று பாடம் கொள்வாரும் உளர். வில்மாண்
- வில்லுக்குச் சுவாமியான இராமன் என்பது பழைய உரை.            (87)