5320.

'ஆயானை, ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி,
                                 அன்பின்
தூயான்வயின்,அவ் அரசு ஈந்தவன், "சுற்று சேனை
மேயான் வருவான்"என விட்டனன்; மேவுகாறும்
ஏயான்,இருந்தான், இடைத் திங்கள் இரண்டு
                                இரண்டும்.

     ஆயானை - ஆகிய வாலியை; ஓர் அம்பினில் - ஒரு அம்பினாலே;
ஆர் உயிர் வாங்கி - அரிய உயிரைக் கவர்ந்து; அன்பின் துயான்வயின் -
அன்பினாலே தூய சுக்கிரீவனிடத்து; அ அரசு ஈந்தவன் - அந்த அரசைக்
கொடுத்த இராமபிரான்; (சுக்கிரீவனை) சுற்றும் சேனை மேயான் - சுற்றுகின்ற
சேனையுடன் கூடியவனாய்; வருவான் என விட்டான் - வரும்படியாக என்று
அனுப்பிவிட்டு; மேவுகாறும் - அவன் வரும் வரையிலும்; ஏயான் - அவனை
ஏவிய இராமன்; திங்கள் இரண்டும் இரண்டும் - நான்கு மாதங்களும்; இடை
-
அந்த இருசிய முகமலையில்; இருந்தான் - தங்கியிருந்தான்.

     இராமபிரான்ஆறுமாதம் பொறுத்திருந்ததாக ஒரு தனிப்பாடல்
பேசுவதைஉலகம் அறியும். இராமன் 'இறையாறு திங்கள் இருந்தான்
வாலிக்கிளையான்வரை' (பெருந் தொகை 1004) மழைக்காலத்தில்
படையெடுப்புநிகழ்த்தக்கூடாது.  சாதுர்மாசம் என்று பேசப்படும் விரதத்தை
மேற்கொள்ளவேண்டும். சாதுர் மாசம் - நான்கு மாதம். சமணர்களும்
பௌத்தர்களும் கூடஇவ்விரதத்தை அனுஷ்டித்ததாக வரலாறு பேசும்.
'பெருமான் சுக்கிரீவன்பால்,திங்கள் நான்கில் விரசுக' என்று கேட்டுக்
கொண்டதாகப் பேசப் பெற்றது(கம்ப. 4138) அம்மலை என்பது பலர்
அறிசுட்டு. முன்பு ஒன்றைக் கூறாமலேஇச்சுட்டு அமையும்.         (93)