5335. | ஆண்தகைஅனுமனும், 'அருளது ஆம்' எனா, மீண்டனன்,விசும்பு எனும் பதத்தை மீச் செல்வான், காண்டலுக்குஉரியது ஓர் உருவு காட்டினான்; தூண்டல் இல்விளக்கு அனாள் இனைய சொல்லினாள். |
விசும்பு எனும் -ஆகாயம்என்று கூறப்படும்; பதத்தை மீச் செல்வான் - இடத்தையும் கடந்து மேலே செல்பவனான; ஆண்டகை அனுமனும் - ஆண்மை மிக்க அனுமனும்; (தான் கொண்ட பேர்உரு) அருளதாம் எனா - தங்கள் திருவுள்ளத் தருளின்படி என்று கூறி; மீண்டனன் - திரும்பி ஒடுங்கி; காண்டலுக்கு உரியது - காண்பதற்கு எளிதான; ஓர் உருவு காட்டினான் - ஒரு வடிவத்தைக் காண்பித்தான் (அப்போது); தூண்டல் இல் - தூண்டுதல் இல்லாத; விளக்கு அனாள் - விளக்கை ஒத்த பிராட்டி; இனைய சொல்லினாள் - இந்த வார்த்தைகளைக் கூறினாள். பிராட்டி அடங்குகஎன்று கூறிய ஆணையை அருள் என்றான். (108) |