அனுமன் விண்ணப்பம் சந்தக் கலிவிருத்தம் 5345. | 'உண்டு துணைஎன்ன எளிதோ உலகின் ? அம்மா ! புண்டரிகைபோலும் இவள் இன்னல் புரிகின்றாள்; அண்ட முதல்நாயகனது ஆவி அனையாளைக் கொண்டு அகல்வதேகருமம்' என்று உணர்வுகொண்டான். |
(அனுமன்) புண்டரிகைபோலும் இவள் - இலக்குமியைப் போன்றுள்ள சீதை; இன்னல் புரிகின்றாள் - தற்கொலை செய்துகொள்கிறாள்; உலகின் - இந்த உலகின் கண்ணே; துணை உண்டு - உனக்குப் பாதுகாப்பாக உள்ளேன்; (அஞ்சாதே) என்ன - என்று கூறுதல்; எளிதோ - சுலபமான செயலோ (ஆகையால்); அண்ட முதல் - உலகங்கட்கு மூலகாரணமாயுள்ள; நாயகனது - தலைவனான இராமபிரானின்; ஆவி அனையாளை - உயிர் போன்ற பிராட்டியை; கொண்டு அகல்வதே - சுமந்து கொண்டு நீங்குவதே; கருமம் என்று - செய்யத் தக்கதுஎன்று; உணர்வு கொண்டான் - எண்ணத்தை மேற்கொண்டான். அனுமன் -தோன்றா எழுவாய். அனுமன் உணர்வு கொண்டான் இராவணன் அரசில் பிராட்டிக்குத் துணையாக உள்ளேன் என்று கூறுபவர் அரியர். கொடுங்கோலுக்கு அஞ்சி ஒதுங்குவதே மாந்தர் இயல்பு. ஆதலின் துணை அற்ற பிராட்டியைக் காப்பது தன்கடன் என்று அனுமன் கருதினான். முதல் அடிக்கு இவள் துன்பத்துக்கு உவமை உண்டோ என்று அனுமன் கருதியதாகப் பேசப்பட்ட திறம் ஆராயத்தக்கது. இன்னல் புரிதல் - தற்கொலை செய்து கொள்ளுதல். அனுமன் பெருமான்பால் 'ஆயிருர் துறப்பதாக உன்னினாள்' (கம்ப. 6045) என்று கூறியதை நினைவு கூர்தல் நன்று அண்டம் முதல் - என்பதில் உள்ள முதல் காரணம். ஆபரணங்கட்குப் பொன்முதல். அதுபோல் உலகங்கட்கு முதல் இராமபிரான். ஆதிபகவன் முதற்றே உலகு என்னும் குறளின் சாரம் இங்கே உள்ளது. இன்னல் காரணம் அதனால் விளைந்தது தற்கொலை. தற்கொலையை இன்னல் என்றான். இரண்டுக்கும் உள்ள நீங்காத தொடர்பு கருதி. இவ்விருத்தம் விளங்காய் - விளங்காய் - விளங்காய் - தேமா என்னும் சீர்களைப் பெற்றுவரும். அமரர் கம்பன் அடிப்பொடி அவர்கள் இவ்விருத்தத்தை 'அளவடி நான்குடை அளவியற்சந்தக் கலிவிருத்தம்' என்பர். நேர் அசையில் தொடங்கின் 14 எழுத்தும், நிரையசையில் தொடங்கின் 15 எழுத்தும் பெற்றுவரும். இத்தகு பாக்கள் இந்நூலில் 292 உள்ளன. (1) |