5346.

'கேட்டி, அடியேன் உரை; முனிந்தருளல்; கேள், ஆய் !
வீட்டியிடும்மேல் அவனை; வேறல் வினை அன்றால்;
ஈட்டி இனி என்பல; இராமன் எதிர், நின்னைக்
காட்டி, அடிதாழ்வென்; இது காண்டி இது காலம்;

     அடியேன் உரை -அடியேனின்மொழியை; கேட்டி - கேட்பாயாக
(அம்மொழியை); முனிந்தருளல் - வெறுத்து
 ஒதுக்காதே; கேளாய்- ;
வீட்டியிடுமேல் -
உன்னைக் கொன்று விடுவானேயானால் ; (பிறகு) அவனை
-
அந்த இராவணனை; வேறல் - வெல்வது; வினை அன்று - 
செய்யத்தக்கது அன்று; இனி - இப்போது; பல - பலவிதமான மொழிகளை;
ஈட்டி என் -
தொகுப்பதால் என்ன பயன்; இராமன் எதிர் -
இராமபிரானுக்கு முன்னே; நின்னை - உன்னை; காட்டி - காண்பித்து; அடி
தாழ்வென் -
உங்கள் இருவரின் திருவடிகளையும் வணங்குவேன்; இதுகாண்டி
-
இதைப்பார்; காலம் இது - அதற்கு ஏற்ற காலம் இதுவே.

     இது முதல் 9கவிதைகள் அனுமன் விண்ணப்பம். பிராட்டியை மீட்பதில்
உறுதி கொண்டு அனுமன் பேசுகின்றான். இராவணன், உன்னைக் கொன்று
விட்டால் பிறகு அவனை வெல்வதால் பயனில்லை என்று திருவடி வருந்தப்
பேசியதில் அன்புமிக்குள்ளது. அதனால் ஆராய்ச்சித் திறம் குன்றியது.
இதனைச் சேக்கிழார், 'காதலால்.... உற்ற வருத்தம்' என்பர் (குங்குலியர் 26)
ஒருவர்பால் ஒன்று சொல்ல விரும்புவார் தாம் சொல்வதை அவர்கள் ஏற்றுக்
கொள்வார்களோ என்ற ஐயம் உண்டாகிற போது மீண்டும் கேளாய் என
மொழிதல் வழக்கமே - அனுமனும் முதலில் கேட்டி என்றவன் முனிந்தருளல்
என்று கூறி மீண்டும் கேளாய் என்றது அறிக. வேறல் வினை அன்று
என்பதற்கு இராவணனை வெல்வது என் செயல் அன்று என்று அனுமன்
கூறியதாக விவரித்தலும் ஒன்று. காலம் என்றது சந்தர்ப்பத்தை. கருத்துற
நோக்கிப் போந்த காலமும் நன்று (கம்ப. 6468)                      (2)