5353. | 'இந்துநுதல்! நின்னொடு இவண் எய்தி, இகல் வீரன், சிந்தை உறு வெந்துயர் தவிர்ந்து, தெளிவோடும், அந்தம் இல்அரக்கர் குலம் அற்று அவிய நூறி, நந்தல் இல்புவிக்கண் இடர், பின் களைதல் நன்றால். |
இந்து நுதல் ! -சந்திரனைஒத்த நெற்றியை உடைய அம்மையே; இகல் வீரன் - பேராற்றல் பெற்ற இராமபிரான்; (நின்னைப் பெற்றமையால்) சிந்தை உறு - மனத்திலே மிக்குள்ள; வெம்துயர் தவிர்ந்து - பெருந்துன்பம் நீங்கப் பெற்று; தெளிவோடும் - அறிவுத் தெளிவுடனே; நின்னொடு - உன்னுடன்; இவண் எய்தி - இந்த இலங்கையை அடைந்து. பின் - பிறகு; அந்தம் இல் - முடிவற்ற; அரக்கர்குலம் - இராக்கதர் கூட்டம்; அற்று அவிய நூறி - சிதைந்து அழியக் கொன்று; நந்தல் இல் - அழிவற்ற; புவிக்கண் இடர் - பூமியின்கண்ணே துன்பத்தை; களைதல் நன்று - களைந்தெடுப்பது சிறப்பானதாகும். பிராட்டி தான்சிறைமீட்சி பெற்றால் இராவணனை அழிப்பது நிகழாதே என்று கருதுவதாக முடிவுகட்டி, அனுமன், நீயும் இராமபிரானிடம் திரும்பி வந்து இராவணனை அழிக்கலாம் என்று கூறினான். இவண் ஏகி என்பதற்கு இந்த இலங்கையிலே பெருமானும் தேவரீரும் திரும்பி எழுந்தருளி என்பது பழைய வுரை (அடை-பதி) செயலற்ற சிவம் சத்தியுடன் சேரின் எத்தொழிலும் வல்லது என்று சௌந்தரிய லகரி பேசும். (சௌந்தரிய7) அவண் எய்தி..... தெளிவோடும் என்னும் பாடத்திற்கு யான் உன்னுடன் இராமபிரான் இருக்குமிடத்தை அடைய, அதனால் அவன் தெளிவு பெற்று, எனப் பொருள் கொள்ள வேண்டும். எய்தி என்னும் செய்து என்னும் வாய்ப்பாட்டுச் சொல் செய என்னும் வாய்பாட்டுப் பொருளில் வந்ததாகக் கொள்ள வேண்டும். (9) |