5354. | 'வேறு இனிவிளம்ப உளதன்று; விதியால், இப் பேறு பெற,என்கண் அருள் தந்தருளு; பின் போய் ஆறு துயர்; அம்சொல் இள வஞ்சி ! அடியேன் தோள் ஏறு, கடிது,'என்று, தொழுது இன் அடி பணிந்தான். |
அம் சொல்இளவஞ்சி ! - அழகிய சொற்களைப்பேசும் இளங்கொடி போல்வாய் ! இனி - இப்போது; விளம்ப -கூறுவதற்கு; வேறு உளது அன்று - வேறுமொழிகள் இல்லை; இப்பேறு - இந்தப் பாக்கியத்தை; விதியால் பெற - முறைப்படி அடியேன் பெறுவதற்கு; என்கண் - அடியேன்பால்; அருள் தந்தருளு - திருவருளை வழங்கியருள்; பின் - அதற்குப்பின்; போய் - இராமபிரான் பக்கலில் போய்; துயர் ஆறு - துன்பத்தைத் தணிப்பாயாக. (அதன் பொருட்டு); அடியேன் தோள் கடிது ஏறு - அடியேனுடைய தோளில் விரைந்து ஆரோகணிப்பாயாக; என்று தொழுது - என்று கூறிப் பணிந்து; இன் அடி - நன்மைதரும் திருவடிகளை; பணிந்தான் - வணங்கினான். இன்அடி - நன்மைதரும் திருவடி. 'இனிய சிந்தை இராமன்' (கம்ப. 3061) 'சிந்திப்பவர்க்கு ..... செந்தேன் முந்திப் பொழிவன... அடித்தலம்' என்று அப்பர் பேசுவர். அதை ஒட்டி இனியதிருவடி என்றும் பொருள் கொள்ளலாம். விதி - முறை. (10) |