5365. | ' "மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடின், தேவு வன் தலைசிந்துக நீ" என, பூவில் வந்தபுராதனனே புகல் சாவம் உண்டு;எனது ஆர் உயிர் தந்ததால். |
மேவு சிந்தை இல்- உன்பால் பொருந்தும் மனம் இல்லாத; மாதரை -பெண்களை; மெய்தொடின் - உடலைத் தொட்டால்; தேவு வன்தலை - தெய்வத்தன்மை பெற்ற வலிய தலைகள்; சிந்துக - சிதறப்படுவனவாகுக; தீது என - (அது) பாவம் என்று; பூவின் வந்த - தாமரைப் பூவிலே தோன்றிய; புராதனனே புகல் - பழையோனான பிரமனால் கூறப்பட்ட; சாவம் உண்டு - சாபம் இராவணனுக்கு உள்ளது; (அச்சாபம்) எனது ஆருயிர் - எனது அரிய உயிரை; தந்தது - பாதுகாத்தது. மாதரை -என்பதில் உள்ள 'ஐ'யை அசையாக்கி 'மாதர்மெய்' என்று சேர்த்துப் பொருள் கொள்ளலாம். அப்போது மாதருடைய என்று பொருள் தரும். சிந்தாமணியில் 2605 ஆம் பாடலில் புகழானை நாண மொழிகள் பல கூறி உள்ள தொடரில் உள்ள 'ஐ'யை அசையாக்கினார் இனியர். (புகழான் நாண மொழிகள் கூறி என்பது பொருள்) தீது - பாவம் உள்ளத்தால் உள்ளலும் தீதே (திருக்குறள் 282) தேவுதலை - என்பதற்கு இ.கோ.பிள்ளைதெய்வத் தன்மையால் மீண்டும் முளைப்பதான தலை என்று உரை கூறினார். தெய்வத்தைப் பணியும் தலை என்றும் பொருள் கூறலாம். தெய்வத்தைப் பணியினும் சாபம் பலிக்கும் என்பதாம். (21) |