5408. | 'அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும் மணம் கிளர்கற்பகச் சோலை வாவிவாய், பிணங்குறு வால்முறை பிடித்து, மாலைய கணம் கொடுகுரக்குஇனம் குளிப்பக் காண்டியால். |
இளம் - இளம்பருவமுடைய; அணங்கு மகளிரொடு - தெய்வ மகளிர் போலும் பெண்களுடன்; அரக்கர் ஆடுறும் - அரக்கர்கள் நீராடும்; மணம் கிளர் - வாசனை மிகுந்த; கற்பகச் சோலை - கற்பகம் அமைக்கப் பெற்ற; வாவிவாய் - பொய்கையின் கண்ணே; குரங்கு இனம் - குரங்குக் கூட்டம்; பிணங்குறு வால் - மாறுபட்டு வளைந்துள்ள வாலை; முறைபிடித்து - வரிசையாகப் பற்றிக்கொண்டு; மாலைய - வரிசைகளை உடையதாய்; கணங்கொடு - கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு; குளிப்ப - நீராடுதலை; காண்டி - காண்பாயாக. ஆல் - அசை.அரக்கர்கள் நீராடிய பொய்கையில் குரங்குகள் நீராடும் என்க. அரக்கர் ஆடுறும் கற்பகச் சோலை - வாவி. இதுவே தழாத் தொடர். ஆடுறும் என்னும் எச்சம் சோலையைத் தழுவாமல் வாவியைத் தழுவிற்று. குடர் முறை முறை பிடித்து - கழுதினம் ஆடக் காண்டி என்று பாடம் கொண்டு, அரக்கர்களின் குடலைப் பிடித்தபடி பேய்கள் நீராடுவதைப்பார் என்று உரை கூறப் பெற்றது. பேய்கள் போர்க்களத்தி்ல் ஆடுவதாகப் பேசப்படுவதே பெருவழக்கு. (64) |