5416.

'எண்ணஅரும் பெரும் படை, நாளை, இந் நகர்
நண்ணிய பொழுது,அதன் நடுவண், நங்கை ! நீ,
விண் உறுகலுழன்மேல் விளங்கும் விண்டுவின்,
கண்ணனை என்நெடும் வெரிநில் காண்டியால்.

     நங்கை - அம்மையே ! எண்ண அரும் பெரும் படை - கணக்கிட
முடியாத பெருஞ்சேனை; நாளை - நாளைய தினத்தில்; இந்நகர் நண்ணிய
பொழுது -
இந்த நகரை யடைந்த போது; அதன் நடுவண் - அந்தச்
சேனையின் நடுவில்; விண் உறு கலுழன் மேல் - விண்ணிலே பறக்கும்
கருடன் மேலே; விளங்கும் - பொலிவு பெறுகின்ற; விண்டுவின் -
திருமாலைப் போல; கண்ணனை - இராம பிரானை; என் - என்னுடைய;
நெடும் வெரிநில் - பெரிய தோள்களில்; நீ காண்டி - நீ பார்ப்பாயாக.

     எண்ணுதல் -கணக்கிடுதல். கருதுதல் என்றும் கூறலாம். கலுழன் -
கருடன். கண்ணன் - திருமால். இங்கே இராமபிரானைக் குறிக்கிறது.
கவிச்சக்கரவர்த்தி பல இடங்களில் இராமபிரானைக் கண்ணன் என்று குறிப்பார்.
'கண்ணனைக் கண்ணில் நோக்கி கனிந்தனன்' (கம்ப. 1965) கண்ணன் -
என்பது பாகதச் சொல் என்பர் பேராசிரியர்.
 (கருங்கண்ணனை -கோவையார்)
இதை வடமொழித் திரிபு என்று கூறுவது பிழை. காண்டி - ஆல் ஆல் -
அசை.                                                  (72)