சீதை கூறியஅடையாளச் சொற்கள் 

கலித்துறை

5419.

ஆக இம்மொழி ஆசு இல கேட்டு, அறிவுற்றாள்;
ஓகை கொண்டுகளிக்கும் மனத்தள், உயர்ந்தாள்;
'போகை நன்றுஇவன்' என்பது, புந்தியின்
                                வைத்தாள்;
தோகையும், சிலவாசகம் இன்னன சொன்னாள்;

     ஆக - இவ்வாறாக; ஆசுஇல - குற்றம் இல்லாத; இம்மொழி கேட்டு
-
(அனுமன் கூறிய) இந்த மொழியைக் கேட்டு; தோகையும் - சீதா
பிராட்டியும்;
அறிவுற்றாள் - அறிவில் தெளிவுபெற்று (அதனால்); ஓகை
கொண்டு -
அன்புற்று; தளிக்கும் மனத்தள் - மகிழ்ச்சி பெற்ற
உள்ளமுடையவளாய்;உயர்ந்தாள் - சிறப்புப் பெற்று; இவன் - இந்த
அனுமன்; போகை நன்று -(இராமபிரான்பால்) செல்வது சிறந்தது; என்பது -
என்னும் எண்ணத்தை;புந்தியில் வைத்தாள் - அறிவில் நிலை நிறுத்தி; இன்னன - இப்படிப்பட்ட;சிலவாசகம் - சில மொழிகளை; சொன்னாள் -
கூறினாள்.

     உவகை என்பது ஓகைஎன்று மருவிற்று. உவகை - அன்பு. அச்சமும்
உவகையும் .... நிமித்தமும் என்னும் புறத்திணைப் பகுதிக்கு (36) நச்சர்
வழங்கிய உரை காண்க. அவர் உவகை - அன்பு என்று வரைந்தார்.
தோகையும் என்பதில் உள்ள 'உம்' அசை. இக்கலித்துறை மா - விளம் -
விளம் - விளம் - மா என்னும் சீர்களைப் பெற்று வரும். இத்தகு பாடல்கள்
இந்நூலில் 1223 உள்ளன.                                      (75)