அனுமன் மன நிலை

கலிவிருத்தம்    

5429.நெறிக்கொடு வடக்கு உறும் நினைப்பினில்
                            நிமிர்ந்தான்,
பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான்,
'சிறித்தொழில் முடித்து அகல்தல் தீது' எனல்,
                            தெரிந்தான்;
மறித்தும் ஓர்செயற்கு உரிய காரியம் மதித்தான்.

     ெ்நறிக் கொடு -(அனுமன்இனித் தான் செல்ல வேண்டிய) வழியைக்
கருதி; வடக்கு உறும் - வடக்கு முகமாகச் செல்லும்; நினைப்பினில் -
நினைப்போடு; நிமிர்ந்தான் - அதற்கு ஏற்பப் பெரியவடிவத்தை எடுத்துக்
கொண்டு; பொறிக்குல மலர்ப்பொழில் இடை - வண்டுக்கூட்டங்கள்
மொய்க்கும் மலர்கள் நிறைந்த அசோகவனத்திடையே; கடிது போவான் -
விரைந்து செல்பவனாகிய அனுமன்; சிறு தொழில் முடித்து அகல்தல் -
(பிராட்டியைக் கண்ட இந்த) சிறு செயலை மட்டும் முடித்துக் கொண்டு
போவது; தீது எனல் தெரிந்தான் - (தன் ஆற்றலுக்குக்) குறைவு என்று
உணர்ந்து; மறித்தும் செயற்கு உரிய ஓர் காரியம் மதித்தான் - மீண்டும்
தான் செய்வதற்குப் பொருப்பான ஒரு செயலைச் செய்ய எண்ணினான்.

     பிராட்டியைக்கண்டு பேசிப் போவதாகிய செயல், தனது ஆண்மைக்குக்
குறைவு என்பதும், வேறு ஒரு பெருஞ் செயலைச் செய்ய வேண்டும் என்பதும்
அனுமனது கருத்து. பொறி - புள்ளி. வண்டைக் குறித்தது; ஆகுபெயர். பொறி
- வண்டு; பொறி கலந்து பொழில். (தேவாரம்) 'வண்டுக் கூட்டம் எழ' என்பது
வைகறைப் பொழுதை உணர்த்துகின்றது. சிறுத்தொழில் வலித்தல் விகாரம்.
சிறுக்குட்டன். சிறுத் தொண்டன் என்பன போன்றது.                  (1)