5430. | 'ஈனம் உறுபற்றலரை எற்றி, எயில் மூதூர் மீனநிலையத்தின் உக வீசி, விழி மானை மானவன் மலர்க்கழலில் வைத்தும்இலென் என்றால், ஆன பொழுது, எப்பரிசின், நான் அடியன் ஆவேன் ? |
ஈனம் உறும்பற்றலரை ஏற்றி - இழிவான செயல்கள்பொருந்திய பகைவர்களாகிய அரக்கர்களைத் தாக்கி அழித்து; எயில் மூதூர் - மதில்கள் சூழ்ந்த இந்த இலங்கை நகரை; மீனநிலையத்தின் உகவீசி - மீன்களுக்கு இருப்பிடமான கடலில் சிதறி விழும்படி வீசி எறிந்து; விழி மானை - கண் பார்வையால் மானை ஒத்த பிராட்டியை; மானவன் மலர்க் கழலில் வைத்தும் இலென் என்றால் - இராமபிரானுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளில் (காணிக்கை போல) வைத்து வணங்கவில்லை என்றால்; ஆனபொழுது - அந்நிலையில் நான் உள்ள போதும்; எப்பரிசின் நான் அடியன் ஆவேன் - எவ்விதத்தில் நான் இராமபிரானுக்கு உண்மை அடியவனாக ஆவேன் ? தலைவனதுவிருப்பத்தை நிறைவேற்றுவதே உண்மை அடியவனின் கடமை. இராமபிரானுடைய பகைவர்களை ஒழித்தலை, அடியவனாகிய அனுமன், தனது கடமையாகக் கருதினான். மான்விழி என்பது விழிமான் எனமாறியது; இலக்கணப் போலி - புறநகர், வாயில் என்பன போல. மீனநிலையம் - கடல். புதிய சொல்லாட்சி. (2) |