5431. | 'வஞ்சனைஅரக்கனை நெருக்கி, நெடு வாலால் அஞ்சினுடன் அஞ்சுதலை தோள் உற அசைத்தே, வெஞ் சிறையில்வைத்தும்இலென்; வென்றும்இலென்; என்றால், தஞ்சம்ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ ? |
வஞ்சனை அரக்கனை- கபடத்தன்மை பொருந்திய அரக்கனாகிய இராவணனை; நெடு வாலால் - எனது நெடிய வாலினால்; அஞ்சினுடன் அஞ்சு தலை தோள் உற - பத்துத் தலைகளும் இருபது தோள்களும் ஒன்று சேரும் படி; நெருக்கி அடைத்து - நெருக்கிக் கட்டி; வெம் சிறையில்வைத்தும் இலென் - கொடிய சிறைக்காவலில் வைத்தேனும் அல்லேன்; வென்றும் இலென் - போரில் அவனை வென்றேனும் அல்லேன்; என்றால் - என்று சொல்லுவமானால்; ஒருவர்க்கு ஒருவர் தஞ்சம் என்றல் -ஒருவருக்கு ஒருவர் பற்றுக்கோடு என்ற உறுதிமொழி கூறல்; தகும் அன்றோ- தகுதி உடையதாகுமல்லவோ (தகுதி உடையதாகாது என்றபடி). தஞ்சம்ஒருவர்க்கு ஒருவர் என்றது. இராமபிரானும் சுக்கிரீவனும் உற்ற துணையாக நட்புக் கொண்டதைக் குறிப்பது. தன் அரசனான சுக்கிரீவனுக்கு உள்ள பொறுப்பை அனுமன் தன்மேல் ஏற்றிக் கொண்டதாகும். அசைத்தல் - கட்டுதல். (3) |