5433.

'மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளது
                                  அன்றால்;
ஓட்டி இவ்அரக்கரை உலைத்து, உரிமை எல்லாம்
காட்டும் இதுவேகருமம்; அன்னவர் கடும் போர்
மூட்டும் வகையாவதுகொல் ?' என்று முயல்கின்றான்.

     இவ் அரக்கரைஉலைத்து ஒட்டி -இந்த அரக்கர்களை எல்லாம்
வருத்தி ஓடச் செய்து; உரிமை எல்லாம் - நான், இராமபிரானுக்கு
அடியனாகும் உரிமைத் தன்மை எல்லாம்; காட்டும் இதுவே கருமம் -
வெளிப்படையாகக் காட்டுகின்ற இதுவே நான் செய்யத் தக்க செயல்; இனி,
மீட்டும் எண்ணும் வினை -
இனிமேல், மறுபடியும் ஆலோசிக்க வேண்டிய
காரியம்; வேறும் உளது அன்று - வேறு ஒன்றும் இல்லை; அன்னவர் -
அந்த அரக்கரை; கடும் போர் மூட்டும் வகை - கொடிய போரில்மூளச்
செய்யும் விதம்; யாவது கொல் என்று முயல்கின்றான் - எதுவாகும் என்று
நினைத்து (அதற்குரிய உபாயத்தை) ஆலோசிப்பவனாயினான் அனுமன்.

     அரக்கரைப்போர் மூட்டி அழிப்பதே தான் செய்யத்தக்க செயல்
என்றும், அதுவே அடியவனாகக் காட்டுதற்குரியதென்றும் அனுமன்
எண்ணுகின்றான். ஆல். கொல்; அசை.                           (5)