5465.

ஆனைத்தானமும், ஆடல் அரங்கமும்,
பானத் தானமும்,பாய் பரிப் பந்தியும்,
ஏனைத் தார் அணிதேரொடும் இற்றன-
கானத்து ஆர் தருஅண்ணல் கடாவவே.

     அண்ணல் -பெரியோனான அனுமன்; கானத்து ஆர் தரு கடாவ -
அசோகவனத்தில் நிறைந்துள்ள மரங்களை (வேரோடு பிடுங்கி) வீசி எறிய;
ஆனை தானமும் ஆடல் அரங்கமும் - (அதனால்) யானைகளைக்
கட்டியுள்ள இடங்களும் நடன சாலைகளும்; பானத் தானமும் - மதுபானம்
செய்யும் இடங்களும்; பாய் பரிப் பந்தியும் - பாய்ந்து ஓடும் இயல்பினவான
குதிரைகள் கட்டும் இடங்களும்; ஏனை தார் அணி தேரொடும் இற்றன -
மற்றைய, சிறு மணிகள் கட்டப்பெற்ற தேரோடும் முறிந்து ஒழிந்தன.
அரங்கம் -நடனசாலை.                                      (37)