சீதை தங்கி இருந்தமரம் மட்டும் அழியாது இருத்தல் 5472. | பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை, விம்முறும்உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம்ஒன்றும், மும் முறை உலகம்எல்லாம் முற்றுற முடிவது ஆன அம் முறை, ஐயன்வைகும் ஆல் என, நின்றது அம்மா ! |
பொய்ம் முறைஅரக்கர் காக்கும் - பொய்யையே தமக்குநெறியாகக் கொண்ட அரக்கர்கள் காத்து வரும்; புள் உறை புது மென் சோலை - பறவைகள் வசிக்கும் படியான புதிய கண்ணுக்கினிய அந்த அசோகவனச் சோலையில்; விம்முறும் உள்ளத்து அன்னம் - துக்கத்தால் மனம் விம்முறும் அன்னம் போன்ற பிராட்டி; இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும் - தங்கியிருந்த அந்த மரம் ஒன்று மட்டும்; மும்முறை உலகம் எல்லாம் - மூன்று வகைப்பட்ட உலகம் முழுவதும்; முற்று உற முடிவதான அம்முறை - அழியும் படி முடிவு பெறுகின்ற அந்த ஊழிக் காலத்தில்; ஐயன் வைகும் ஆல் என நின்றது - திருமால் தங்குகின்ற ஆலமரம் போல ஊறுபடாமல் நிற்பதாயிற்று. மற்றை மரங்கள்எல்லாம் அழிய, பிராட்டி தங்கியிருந்த மரம் மாத்திரம் அழியாமலிருப்பதற்கு - எல்லாம் அழியும் பிரளய காலத்தில் திருமால் பள்ளி கொள்ளும் ஆலமரம் மாத்திரம் நிற்பது உவமை ஆயிற்று. ஊழிக் காலத்தில் எஞ்சியிருக்கும் ஓர் ஆலமரத்தின் ஓர் இலையில் குழந்தை வடிவில் திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பான் என்பது புராணச் செய்தி. இச்செய்தி முன்னரும் (3683 வந்தது; பின்னும் (5884) வரும். பெருமாள் திருமொழியிலும் (8;7) காண்க. அன்றே: தேற்றப் பொருளுடையது (தெளிவுபடுத்துவது.) (44) |