5484. | அரி படுசீற்றத்தான்தன் அருகு சென்று, அடியின் வீழ்ந்தார்; 'கரி படு திசையின் நீண்ட காவலாய் ! காவல் ஆற்றோம் ! கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச, எரி படுதுகிலின், நொய்தின் இற்றது கடி கா' என்றார். |
அரி படுசீற்றத்தான் தன் அருகு சென்று அடியில் வீழ்ந்தார் - சிங்கத்தினிடம் உண்டாகும் கோபத்தை உடைய இராவணன் பக்கம் சென்று அவன் பாதங்களில் விழுந்த பருவத் தேவர், (அவனை நோக்கி); கரிபடு திசையின் நீண்ட காவலாய் - திக்கயங்கள் வாழ்கின்ற திக்குகளின் எல்லை வரையிலும் நீண்டு பரந்த ஆட்சியை உடையோய்!; காவல் ஆற்றோம் - (இப்போது) சோலையைப் பாதுகாக்கும் ஆற்றல் இழந்தோம்; கிரி படுகுவவுத்திண் தோள்குரங்கு - மலைபடுத்துப் போகும்படியான திரண்ட வலிய தோள்களை உடைய ஒரு குரங்கு; இடை கிழித்து வீச - சோலையினிடையில் புகுந்து மரங்களை ஒடித்து வீசுதலினால்; கடிகா எரிபடு துகிலின் நொய்தின் இற்றது - காவல் மிக்க அச்சோலை நெருப்புப்பட்ட ஆடை போல, விரைவில் அழிந்தது; என்றார் - என்று கூறினர். 'கிழித்து வீச'என்ற தொடர், மரங்களை ஒடித்தலும், மண்டபம் முதலிய கட்டிடங்களை இடித்தலும் அனுமனுக்கு எளிய செயல் என்பதைப் புலப்படுத்துகிறது. 'நெருப்பில்பட்ட துகில்' - விரைவில் அழிவதற்கு உவமை. கடிகா - காவல் சோலை. (56) |