அனுமன் பிடித்துவருமாறு கிங்கரரை இராவணன் ஏவுதல் 

5489.

அரு வரைமுழையில் முட்டும் அசனியின் இடிப்பும்,
                                      ஆழி
வெருவரு முழக்கும்,ஈசன் வில் இறும் ஒலியும்,
                                      என்ன,
குரு மணி மகுடகோடி முடித் தலை குலுங்கும்
                                    வண்ணம்,
இருபதுசெவியினூடும் நுழைந்தது, அவ் எழுந்த
                                    ஓசை.

     அருவரை முழையின்முட்டும் அசனியின் இடிப்பும் - பெரிய
மலையின் குகையிலே போய்த் தாக்கும் இடியின் முழக்கமும்; ஆழி வெருவரு
முழக்கும் -
(பிரளயகாலத்தில்) அச்சம் உண்டாகுமாறு தோன்றுகின்ற கடலின்
ஒலியும்; ஈசன் வில் இறும் ஒலியும் என்ன - சிவனது வில்லை (இராமபிரான்)ஒடித்த போது ஏற்பட்ட ஒலியும், என்று சொல்லும்படி; குரு
மணி மகுடகோடி முடித்தலை குலுங்கும் வண்ணம் -
ஒளி பொருந்திய
இரத்தினங்கள்பதிக்கப்பெற்ற கிரீடங்களை வரிசையாக அணிந்த மயிர் முடியை
உடையபத்துத்  தலைகளும் அசையும்படி; எழுந்த அவ் ஓசை - எங்கும்
பரந்தெழுந்த அந்தப் பேரோசை; இருபது செவியினூடும் நுழைந்தது -
இராவணன் இருபது காதுகளின் வழியே உட் புகுந்து சென்றது.

     அனுமன்ஆர்ப்பின் பெருமை இங்குக் கூறப் பெற்றது. அனுமனது
பேரொலிக்கு, இடியின் முழக்கம், இராமபிரான் ஒடித்த சிவதனுசின் ஒலி,
ஊழிக்காலத்துப் பொங்கும் கடலின் பேரொலி, உவமைகளாயின.         (1)