5498. | வெய்துறுபடையின் மின்னர்; வில்லினர்; வீசு காலர்; மையுறு விசும்பின்தோன்றும் மேனியர்; மடிக்கும் வாயர்; கை பரந்து உலகுபொங்கிக் கடையுகம் முடியும்காலை, பெய்ய என்றுஎழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார். |
மடிக்கும் வாயர்- (கோபத்தால்) மடிக்கின்ற உதட்டை உடையவர்களாகிய அந்த அரக்கர்கள்; வெய்து உறு படையின் மின்னர் - கொடுமை மிகுந்த ஆயுதங்களான மின்னலை உடையவர்களாய்; வில்லினர், வீசு காலர் - விற்களை உடையவர்களாய், வீசுகின்ற மூச்சுக் காற்றை உடையவர்களாய்; மை உறு விசும்பின் தோன்றும் மேனியர் - மேகம் பொருந்திய வானம் போன்ற கரிய உடம்பை உடையவர்களாய்; கைபரந்து, உலகு பொங்கி கடையுகம் முடியும் காலை - பக்கங்களில் பரவி, உலகின் மீது (கடல்கள்) பெருக்கெடுத்து யுகங்கள் முடியும் காலத்தில்; பெய்ய என்று எழுந்த மாரிக்கு - பெரு மழைபெய்வதற்கு மேற்கிளம்பிய மேகத்துக்கு; உவமை சால் பெருமை பெற்றார் - உவமையாதற்கு ஏற்ற பெருமையைப் பெற்றவர்களாய் விளங்கினர். அந்த அரக்கவீரர் பிரளய காலத்தில் வானத்துத் தோன்றும் மேகக் கூட்டத்தை ஒத்தனர் என்பதாம். (10) |